விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
விளையாட்டு விடுதிகளில் பள்ளி மாணவ- மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-;
செங்கல்பட்டு,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டுத்துறையில் சாதனைகள் புரிவதற்கு விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி மதுரை, திருச்சி, நெல்லை, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி, மற்றும் நாமக்கல் போன்ற இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
மாணவிகளுக்கான விளையாட்டு விடுதி - ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி மற்றும் சென்னை போன்ற இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
மேற்காணும் விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வு வரும் 24-ந்தேதி காலை 8 மணிக்கு வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம் அரசு உயர்நிலை பள்ளியில் நடைபெறவுள்ளது.
மாணவர்களுக்கான விளையாட்டுகளாக தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வோண்டோ, கையுந்துபந்து, பளு தூக்குதல், கபட, மேசைப்பந்து, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ், வில்வித்தை போட்டிகள் நடைபெறும்.
மாணவிகளுக்கான விளையாட்டுகளாக, தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வோண்டோ, கையுந்துபந்து, பளுதூக்குதல், கபடி, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் (www.sdat.tn.gov.in) என்ற இணைய தள முகவரியில் விளையாட்டு விடுதியில் சேருவதற்கான படிவத்தை (ஆன்லைன் ரிஜிஸ்ட்ரேஷன்) பூர்த்தி செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. படிவத்தை பூர்த்தி செய்வதற்கான கடைசி நாள் வருகிற 22-ந்தேதி மாலை 4 மணி ஆகும் மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703481 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.