துடியலூர்
துடியலூர் அருகிலுள்ள அசோகபுரம் ஊராட்சி செங்காளிபாளையம் மந்திராலயம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் கண்ணன் (வயது 31). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக உள்ளார். இவரது மனைவி சாந்திப்பிரியா. இவர்களுக்கு மோனிகா (7), பிரித்திகா (5) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகள் கோட்டூரில் உள்ள சாந்திபிரியாவின் பெற்றோர் வீட்டில் வளர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் செங்காளிப்பாளையத்தில் உள்ள கண்ணனின் சொந்த வீட்டை விற்று விட்டு தனது பெற்றோருடன் சென்று ஒன்றாக இருக்கலாம் என்று சாந்திப்பிரியா கூறியதன் பேரில் கண்ணனுக்கு விருப்பம் இல்லாமல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக அந்த வீட்டினை விற்றுள்ளார். வீடு விற்ற பணத்தில் தனக்கிருந்த சிறு கடன்களை அடைத்துவிட்டு மீதிதொகையில் அவரது மனைவியின் தாயார் வீட்டிற்கு அருகில் ஒரு இடத்தை வாங்கி உள்ளார்.
இந்த நிலையில் சாந்திப்பிரியா, கண்ணனிடம் வேலையை ராஜினாமா செய்து விட்டு பெற்றோருடன் வரவேண்டும் என்று கூறி உள்ளார். மனைவி கூறியபடி அதையும் கண்ணன் செய்துள்ளார். இதற்கிடையில் சொந்த வீட்டை விற்றதால் கண்ணன் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் அசோகபுரம் பகுதியில், மனைவியிடம் தொலைபேசியில் பேசி விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.