பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை போலீசார் ஓடி சென்று காப்பாற்றினர்.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை போலீசார் ஓடி சென்று காப்பாற்றினர்.
சப்-கலெக்டர் அலுவலகம்
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் ொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.
அப்போது சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு பெண் தனது 2 குழந்தைகளுடன் மொபட்டில் வந்தார். பின்னர் அவர் தனது மொபட்டை அங்கு நிறுத்திவிட்டு அலுவலகத்துக்குள் சென்று கொண்டு இருந்தார்.
பெண் தீக்குளிக்க முயற்சி
அப்போது அந்த பெண் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து அதில் இருந்த மண்எண்ணெயை தனது மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் ஓடி சென்று அந்த பெண்ைண மீட்டனர்.
பின்னர் ஒரு குடத்தில் தண்ணீரை எடுத்து அந்த பெண் மீது போலீசார் ஊற்றினார்கள். தொடர்ந்து சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார்.
தாக்கியவர்கள் மீது நடவடிக்கை
அதில் அந்த பெண் பொள்ளாச்சி தன்னாச்சியப்பன் வீதியை சேர்ந்த சதீஷ் என்பவரது மனைவி சத்யா (வயது 30) என்பது தெரியவந்தது. கடந்த மாதத்தில் அந்த பெண் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை.
இது தொடர்பாக அக்கம் பக்கத்தில் சத்யா கேட்டார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலருடன் தகராறு ஏற்பட்டது. இதில் அவர்கள் சத்யாவையும், அவருடைய 8 வயது மகனையும் தாக்கியதாக தெரிகிறது.
இது குறித்து போலீசில் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்ைக எடுக்கக்கோரி அவர் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.
அறிவுரை
இதை தொடர்ந்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த சப்-கலெக்டர், இதுபோன்று செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவம் காரணமாக அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.