டிரான்ஸ்பார்மரை உடைத்து ரூ.1½ லட்சம் மின்வயர்கள் திருட்டு

செய்யாறு அருகே டிரான்ஸ்பார்மரை உடைத்து ரூ.1½ லட்சம் மதிப்புள்ள மின்வயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

Update: 2022-03-30 16:16 GMT
செய்யாறு

செய்யாறு அருகே டிரான்ஸ்பார்மரை உடைத்து ரூ.1½ லட்சம் மதிப்புள்ள மின்வயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

 விவசாய நிலத்தில் டிரான்ஸ்பார்மர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா எச்சூர்போர்டு கிராமத்தில் இருந்து பாடித்தாங்கல் செல்லும் சாலையில் விவசாய நிலத்தில் டிரான்ஸ்பார்மர் உள்ளது.

இந்த நிலையில் எச்சூரை சேர்ந்த இளங்கோவன் என்பவர் தனது நிலத்திற்கு சென்றார். அப்போது அவரது நிலத்தின் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் கீழே கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் புரிசை மின் பகிர்மான நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தனர்.

 டிரான்ஸ்பார்மரை உடைத்து வயர்கள் திருட்டு

அப்போது மர்ம நபர்கள், டிரான்ஸ்பார்மருக்கு வரும் மின் இணைப்பை துண்டித்து, அதனை மின்கம்பத்தில் இருந்து கீழே இறங்கி உள்ளனர்.
 
பின்னர் டிரான்ஸ்பார்மரை உடைத்து அதற்குள் இருந்த காப்பர் வயர்களை திருடிச் சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.1½ லட்சம் இருக்கும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் அனைக்காவூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்