ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - அதிர்ஷ்டவசமாக டிரைவர்கள் உயிர் தப்பினர்

லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.;

Update:2022-04-02 14:17 IST
ஸ்ரீபெரும்புதூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் அருகே கூட்டுச் சாலையில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதன் வழியே சென்னையை நோக்கி டாரஸ் லாரி சென்று கொண்டு இருந்தது.

இதேபோல் சென்னையிலிருந்து ராணிப்பேட்டை நோக்கி கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் லாரிகள் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கன்டெய்னர் லாரி கீழே கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரிகளில் இருந்த டீசல் கசிந்து சாலையில் வழிந்தோடியது. இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ விபத்து ஏற்படாமல் தடுத்து, இடிப்பாட்டில் சிக்கிய வாகனத்தை அப்புறப்படுத்தினர்.

இந்த விபத்தின்போது தேசிய நெடுஞ்சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி சரிந்து விழுந்தது. இதில் இருசக்கர வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக மோட்டார் சைக்கிளில் வந்தவர் நூலிலையில் உயிர் தப்பினார். 2 லாரி டிரைவர்களும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த விபத்தால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்