தேர்வு கட்டண உயர்வை கண்டித்து அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

தேர்வு கட்டண உயர்வை கண்டித்து மன்னார்குடியில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-05 19:00 GMT
மன்னார்குடி:-

தேர்வு கட்டண உயர்வை கண்டித்து மன்னார்குடியில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வை கண்டித்து மன்னார்குடியில் ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 
ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட துணைத்தலைவர் பாரதிசெல்வன் தலைமை தாங்கினார். இதில் மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் கோபி, சந்துரு, அபிமன்யூ மற்றும் ஏராளமான மாணவர்கள கலந்து கொண்டனர். 

திரும்பப்பெற வேண்டும்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் நடப்பாண்டிற்கான மாணவர்களின் தேர்வு கட்டணத்தை உயர்த்தி பல்கலைக்கழகம் அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் தேர்வு கட்டணம் சென்ற ஆண்டை விட கூடுதலாக உள்ளது. எனவே தேர்வு கட்டண உயர்வை உடனடியாக  திரும்பப்பெற வேண்டும். பழைய தேர்வு கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

மேலும் செய்திகள்