பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே கல்லூரி மாணவர்கள் மோதல்; ரெயில் மீது கல்வீச்சு

பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே கல்லூரி மாணவர்கள் மோதலில் அரக்கோணம் மின்சார ரெயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

Update: 2022-04-12 05:20 GMT
பெரம்பூர்,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று திருப்பதி நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். அப்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்த அரக்கோணம் ரெயிலும் ஒரே திசையில் சென்று கொண்டிருந்தன. இந்த நிலையில் பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே சென்ற போது, மாநில கல்லூரி மாணவர்கள் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகளுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர். 

பொறுமையிழந்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதையடுத்து திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து கீழே இறங்கிய மாநில கல்லூரி மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சென்ற அரக்கோணம் மின்சார ரெயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். 

அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த செம்பியம் போலீசார் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசார் உடனடியாக மாநில கல்லூரி மாணவர்கள் 15 பேரை சுற்றிவளைத்து பிடித்து பெரம்பூர் ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். இதனால் இரண்டு ரெயில்களில் பயணம் செய்த பயணிகளும் பெரும் பீதிக்கு ஆளானார்கள்.

மேலும் செய்திகள்