விநாயகர் கோவிலில் சுவாமி சிலைகள் உடைப்பு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
உத்திரமேரூர் அருகே விநாயகர் கோவிலில் சுவாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.;
உத்திரமேரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த அம்மையப்பநல்லூர் கிராமத்தில் பழமை வாய்ந்த செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் உள்பகுதியில் ஐயப்பனுக்கு என தனி சன்னதியும், நவக்கிரக சன்னதி மற்றும் சிவன், நந்தி, பார்வதி சிலைகளும் உள்ளது. இந்த கோவிலை கிராம மக்கள் பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற பூசாரி நேற்று காலை கோவிலை திறந்தபோது உள்ளே ஐயப்பன் சிலை தலை கை துண்டிக்கப்பட்ட நிலையிலும், நவக்கிரக சிலைகள் நான்கு சிலைகள் உடைக்கப்பட்டும் காணப்பட்டது. இதைக் கண்ட பூசாரி மற்றும் கிராம மக்கள் உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிலையினை உடைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.