லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு
லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.;
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் தேனம்பாக்கம் தாமரைக்குளம் தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 38). காஞ்சீபுரம் அருகே ஒரகடத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் ஹரிகிருஷ்ணன் காஞ்சீபுரம் அடுத்த மாங்கல்கூட்ரோடு அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார், அப்போது ஓரிக்கை-தேனம்பாக்கம் வழியாக விஷ்ணு நகர் பகுதி அருகே வந்தபோது எதிரே வந்த ஒரு கன்டெய்னர் லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஹரிகிருஷ்ணன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஹரிகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.