ஆன் லைன்மூலம் ராணுவவீரர், நர்சு இழந்த ரூ.59 ஆயிரம் மீட்பு

ஆன் லைன்மூலம் ராணுவவீரர், நர்சு இழந்த ரூ.59 ஆயிரத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.

Update: 2022-04-14 16:23 GMT
வேலூர்

ராணுவ வீரர் மற்றும் நர்சு இழந்த ரூ.59 ஆயிரத்த சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.

ராணுவவீரர்

வேலூர் அம்முண்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன். ராணுவ வீரர். இவரது செல்போனுக்கு கடந்த மாதம் வங்கியில் இருந்து அனுப்பியது போன்று குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் வங்கி விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் வங்கி கணக்கு முடக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அதில் இணையதள லிங் ஒன்றும் இருந்தது. இதைநம்பிய பாண்டியராஜன் அந்த லிங்கில் சென்று வங்கி விவரங்களை பதிவு செய்துள்ளார். 

இதையடுத்து அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரம் மாயமாகியது. பின்னர் அவர் வங்கியை தொடர்பு கொண்டு கேட்டபோது, வங்கியில் இருந்து குறுந்தகவல் அனுப்பப்படவில்லை என்றும் மர்மநபர் ஏமாற்றியதும் அவருக்கு தெரியவந்தது.

இலவச எண்

இதேபோல, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரியும் திவ்யா (வயது 29) என்பவரின் பணம் ரூ.19 ஆயிரத்தை மர்மநபர்கள் ஆன்லைன் மூலம் அபகரித்தனர். இருவரும் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து இருவரின் பணமும் மீட்கப்பட்டது.

மீட்கப்பட்டதற்கான ஆணை நகலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் அவர்களிடம் ஒப்படைத்தார். சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி கூறுகையில், செல்போன் மூலம் தொடர்பு கொள்ளும் அறியாத நபர்களிடம் வங்கிவிவரங்களை பகிரவேண்டாம். எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சைபர் குற்றங்களால் யாராவது பாதிக்கப்பட்டால் 1930 என்ற இலவச உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றார்.

மேலும் செய்திகள்