காதல் ஜோடி துப்பட்டாவால் கட்டிக்கொண்டு பிஏபி வாய்க்காலில் குதித்து தற்கொலை

காதல் ஜோடி துப்பட்டாவால் கட்டிக்கொண்டு பிஏபி வாய்க்காலில் குதித்து தற்கொலை

Update: 2022-04-19 16:11 GMT
பொங்கலூர்:
பொங்கலூரில் இளம் காதல் ஜோடி துப்பட்டாவால் கட்டிக்கொண்டு பி.ஏ.பி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். 
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காதல் ஜோடி
திருப்பூர் அருகே பொங்கலூரை அடுத்த கொடுவாயை சேர்ந்தவர் முருகேசன் என்பவரின் மகன் நரேஷ் குமார் (வயது 18). பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். பொங்கலூர் அருகே உள்ள காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் என்பவரது மகள் பவிஷா (18). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு பியூட்டி பார்லர் பயிற்சிக்காக சென்று வந்தார்.
 இவர்கள் இருவரும் பொங்கலூர் பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி பவிஷாவை திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை  பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் அவினாசிபாளையம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
மிதந்து வந்த உடல்கள்
இந்த நிலையில் நேற்று பொங்கலூர் தேவனம்பாளையம் அரசு விதைப்பண்ணை அருகே செல்லும் பி.ஏ.பி. வாய்க்காலில் ஒரு வாலிபர் மற்றும் இளம்பெண்ணின் உடல் மிதந்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது அந்த 2 உடல்களும் ஒரு துப்பட்டாவால் கட்டப்பட்டிருந்தது. பின்னர் அந்த உடல்களை மீட்டனர்.
மேலும் பிணமாக மீட்கப்பட்ட வாலிபரின் சட்டை பையில் செல்போன் ஒன்று இருந்தது. அந்த செல்போன் மூலம் விசாரணை மேற்கொண்டதில் பிணமாக மிதந்தது நரேஷ்குமார், பவிஷா என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
காரணம் என்ன?
நரேஷ்குமாருக்கு திருமண வயது பூர்த்தி ஆகாத நிலையில், நம்மை பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில் காதல் ஜோடி  வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்