பெண் கொலை வழக்கு: ஆபாச படத்தில் நடித்ததாக கூறி கணவர் கொன்றது அம்பலம்

ராமநகரில், நடத்தையில் சந்தேகப்பட்டு பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆபாச படத்தில் நடித்ததாக கூறி கணவர் கொலை செய்தது அம்பலமாகி உள்ளது

Update: 2022-04-19 16:18 GMT
பெங்களூரு: ராமநகரில், நடத்தையில் சந்தேகப்பட்டு பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆபாச படத்தில் நடித்ததாக கூறி கணவர் கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.

கத்தியால் குத்திக்கொலை

பெங்களூரு சாமண்ணா கார்டனை சேர்ந்தவர் ஜாகீர் பாஷா(வயது 40). இதுபோல பேடராயனபுராவை சேர்ந்தவர் மோபினா பானு(35). இந்த தம்பதிக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 5 குழந்தைகள் உள்ளனர். ஜாகீர் ஆட்டோ ஓட்டி வந்தார். ஜாகீர்-மோபினா தம்பதி தங்களது குழந்தைகளுடன் கடந்த சில தினங்களாக ராமநகர் டவுன் ரகுமானியநகர் பகுதியில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக மோபினாவை குழந்தைகள் கண்முன்பே ஜாகீர் கத்தியால் குத்திக்கொலை செய்தார். தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில் மோபினா கொலையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது மோபினாவின் நடத்தையில் சந்தேகம் கொண்ட ஜாகீர் அடிக்கடி தகராறு செய்து வந்து உள்ளார்.

ஆபாச படத்தில் நடித்ததாக...

மேலும் செல்போனில் ஆபாச படம் பார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்ட ஜாகீர் அடிக்கடி செல்போனில் அந்த படங்களை பார்த்து வந்து உள்ளார். அப்போது ஒரு ஆபாச படத்தில் நடித்திருந்த பெண் பார்ப்பதற்கு மோபினா போல் இருந்து உள்ளார். இதனால் மோபினாவிடம் நீ தான் ஆபாச படத்தில் நடித்து உள்ளாய் என்று கூறி ஜாகீர் தகராறு செய்து உள்ளார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோலாரில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் வைத்து ஆபாச படத்தில் நடித்ததாக கூறி மோபினாவை, ஜாகீர் அடித்து உள்ளார். மேலும் பெங்களூருவுக்கு வந்தும் அவர் மோபினாவுக்கு தொல்லை கொடுத்து உள்ளார். 

இதுபற்றி அறிந்த மோபினாவின் தந்தை கவுஸ் பாஷா, ஜாகீர் மீது போலீசில் புகார் அளிக்க முயன்று உள்ளார். ஆனால் அதை மோபினா தடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான் மோபினாவை, ஜாகீர் கொன்றதும் அம்பலமாகி உள்ளது.

மேலும் செய்திகள்