கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-;

Update:2022-04-20 06:27 IST
காஞ்சீபுரம்,

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009, சட்ட பிரிவு 12 (1) (சி)ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன் பொருட்டு அரசால் ஏற்கனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு 2013-14ம் கல்வியாண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் வண்ணமும், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன்பெறும் வண்ணமும், வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் பொருட்டும் கூடுதல் வழிகாட்டுதலும், திருத்திய கால அட்டவணையும், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள. வழிகாட்டுதல்களுடன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களும் கூடுதலாக அரசால் வழங்கப்படுகிறது.

எதிர்வரும் 2022-2023-ம் கல்வியாண்டுக்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் செயல்படும் 147 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் மெட்ரிகுலேசன், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி எல்.கே.ஜி. வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டின் கீழ் 2,036 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான வசதி ret.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே இதற்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் வெற்றிகரமாகப் பதிவேற்றம் செய்யப்பட்ட விபரம், பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அளிக்கப்படும்.

மேற்காண் சேர்க்கைக்காக விண்ணப்பங்களை Online வழியாக இன்று (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் 18-ந் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.

முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆகியோரது அலுவலகங்களில் எந்தவித கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.

இந்த மாவட்டத்திலுள்ள அரசு இ-சேவை மையங்களை பதிவேற்றம் செய்வதற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள, ஆதரவற்றவர், எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர், 3-ம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்குக் குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்படும்.

மேற்காணும் வழிகாட்டுதலின்படி சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி் பள்ளிகளில் சேரும் வாய்ப்பினை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்