செங்கல்பட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - நாளை நடக்கிறது
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-;
செங்கல்பட்டு,
தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில், வெள்ளிக்கிழமை தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அதனடிப்படையில், நாளை (வௌளிக்கிழமை) செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலை தேடுபவர்கள் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது. எனவே, மேற்காணும் கல்வித்தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நாளை காலை 10 மணிக்கு செங்கல்பட்டு, வெண்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.