கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை

உத்திரமேரூரில் கடன் தொல்லையால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2022-04-21 17:57 IST
உத்திரமேரூர்,  

உத்திரமேரூர் பேரூராட்சி நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 40). விவசாயி. இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும் 3 வயதில் தத்தெடுத்த ஆண் குழந்தையும் உள்ளனர். புருஷோத்தமன் மனைவியுடன் வாடாநல்லூரில் வசித்து வந்தார். கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். மேலும் அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.

2 நாட்களுக்கு முன்பு இவரது மனைவி மகாலட்சுமி ஓசூருக்கு சென்றதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு புருஷோத்தமனின் சகோதரர் விஷ்ணுகுமார் புருஷோத்தமனுக்கு உணவு கொடுப்பதற்காக செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து அவர் நேரடியாக உணவை கொடுப்பதற்காக வாடாநல்லூர் கிராமத்திற்கு சென்றார். வீட்டின் உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டு இருந்ததால் கதவை தட்டி பார்த்து பின்னர் ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள மின்விசிறியில் புருஷோத்தமன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீவாசன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்