பொள்ளாச்சியில் இடபற்றாக்குறையால் தவிக்கும் நகராட்சி பள்ளி
நகராட்சி பள்ளியில் இடபற்றாக்குறையால் மாணவர்கள் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக வேறு பள்ளிகளில் சேர மாற்று சான்றிதழை மாணவர்கள் வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.;
பொள்ளாச்சி
நகராட்சி பள்ளியில் இடபற்றாக்குறையால் மாணவர்கள் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக வேறு பள்ளிகளில் சேர மாற்று சான்றிதழை மாணவர்கள் வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இடபற்றாக்குறை
பொள்ளாச்சி ஊத்துக்காடு ரோடு ராமகிருஷ்ணா நகரில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. இதன் காரணமாக கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது.
கோவை மாவட்டத்தில் உள்ள நடுநிலைப்பள்ளிகளிலேயே இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகம் என்று கல்வி துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப போதிய வகுப்பறைகள், கழிப்பறைகள் இல்லை. இதனால் இடநெருக்கடியில் அமர்ந்து மாணவ-மாணவிகள் பாடம் கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
சுழற்சி முறையில் வகுப்புகள்
இடம் பற்றாக்குறை காரணமாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவ-மாணவிகள் மாற்று சான்றிதழை வாங்கி சென்று, வேறு பள்ளியில் சேர்ந்து வருகின்றனர்.
இதனால் வருகிற கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை குறையும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
வேறு பள்ளியில் சேர்க்க முயற்சி
பொள்ளாச்சி ராமகிருஷ்ணா நகர் நகராட்சி பள்ளியில் கடந்த ஆண்டு 520 மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக பாடங்கள் நடத்தப்பட்டதால் கடந்த ஆண்டை விட நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது.
இதனால் எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை 964 மாணவ-மாணவிகள் சேர்ந்தனர். இந்த ஆண்டு தனியார் பள்ளியில் இருந்து மட்டும் 400 மாணவ-மாணவிகள் இந்த பள்ளிக்கு வந்து உள்ளனர்.
மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளதால் இடபற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. தற்போது எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை 177 மாணவர்களும், 107 மாணவிகளும் உள்ளனர். இவர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் மட்டும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதே மற்ற பள்ளிகளில் வாரத்தில் 5 நாட்களும் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இதனால் பெற்றோர்கள் மாணவ-மாணவிகளை வேறு பள்ளியில் சேர்க்க முயற்சி செய்து வருகின்றனர்.
மாற்று சான்றிதழ்
தற்போது வரை 40 பேர் மாற்று சான்றிதழை வாங்கி சென்று உள்ளனர். மேலும் மாணவ-மாணவிகள் மாற்று சான்றிதழை கேட்டு வருகின்றனர். தற்போது 924 பேர் மட்டும் படித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளியில் சேர்ந்தனர். ஆனால் தற்போது வரை வெறும் 5 பேர் மட்டுமே சேர்ந்து உள்ளனர். இதே நிலை நீடித்தால் வருகிற கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை குறைந்து விடும்.
எனவே பள்ளியில் கூடுதல் கட்டிட வசதிகள், மாணவர்கள் அமர்ந்து சாப்பிட கட்டிட வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மேலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக ஆசிரியர்களை பணி அமர்த்த கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.