உயர் மின்னழுத்தம் காரணமாக திருவிடைவாசலில் வீடுகளில் மின்சாதனங்கள் பழுது
திருவிடைவாசலில் உயர் மின்னழுத்தம் காரணமாக வீடுகளில் மின்சாதனங்கள் பழுதடைந்ததால் கிராம மக்கள் அவதிப்பட்டனர்.
கொரடாச்சேரி:-
திருவிடைவாசலில் உயர் மின்னழுத்தம் காரணமாக வீடுகளில் மின்சாதனங்கள் பழுதடைந்ததால் கிராம மக்கள் அவதிப்பட்டனர்.
சூறைக்காற்றுடன் மழை
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென்று சூறைக்காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. 2 மணி நேரத்திற்கும் மேலாக சூறைக்காற்று நீடித்தது. இதனால் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், குழந்தைகள், முதியவர்கள், பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள திருவிடைவாசல் கிராமத்திலும் சூறைக்காற்று மற்றும் மிதமான மழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது.
மின்சாதனங்கள் பழுது
நேற்று முன்தினம் இரவு துண்டிக்கப்பட்ட மின்சாரம் நேற்று மீண்டும் வழங்கப்பட்டது. அப்போது திருவிடைவாசல் கிராமத்தில் உள்ள மணல்மேட்டு தெருவை சேர்ந்த 25 பேரின் வீடுகளில் உயர் மின்னழுத்தம் காரணமாக டி.வி., மின் விசிறி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுதடைந்தன.
உயர் மின்னழுத்தம் காரணமாக வீட்டு உபயோக மின் சாதன பொருட்கள் திடீரென பழுதடைந்ததால் கிராம மக்கள் பெரும் அவதிப்பட நேர்ந்தது.