மறைமலைநகர் அருகே குளிர்பான வினியோகஸ்தர் தற்கொலை

மறைமலைநகர் அருகே குளிர்பான வினியோகஸ்தர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-05-18 09:21 GMT
வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பேரமனூர் பம்பைக்காரர் தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 34). தண்ணீர், குளிர்பானம் போன்றவற்றை மொத்தமாக வாங்கி பல்வேறு கடைகளுக்கு வினியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார். இந்த பொருட்களை வைப்பதற்கு மறைமலைநகர் அருகே உள்ள சட்டமங்கலம் மாருதி நகரில் குடோன் வைத்துள்ளார்.

இந்த நிலையில் யுவராஜ் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் பயந்து போன அவரது மனைவி நேற்று சட்டமங்கலத்தில் உள்ள குடோனுக்கு சென்று பார்த்தபோது குடோனில் யுவராஜ் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மறைமலைநகர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவராஜ் கடன் பிரச்சினையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்