வாலிபரின் இதயத்தில் உறைந்த ரத்தத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை

வாலிபரின் இதய பகுதியில் உறைந்த ரத்தத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை புரிந்தனர்.

Update: 2022-05-18 16:19 GMT
கோவை

வாலிபரின் இதய பகுதியில் உறைந்த ரத்தத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை புரிந்தனர்.

உறைந்த நிலையில் ரத்தம்

கோவை செல்வபுரம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26). இவர் கடந்த மாதம் 25-ந் தேதி நெஞ்சு பகுதியில் காயங்களுடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு இதயத்தை சுற்றிலும் உறைந்த நிலையில் ரத்தம் காணப்பட்டது. இதனால் இதயத்தின் செயல்பாடு குறைந்து உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. 

மேலும் அவரின் இதய பகுதியில் குத்துகாயம் இருந்ததால்  ரத்த கசிவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய அரசு டாக்டர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து அவரின் இதய பகுதியில் உறைந்த நிலையில் காணப்பட்ட ரத்தம் அறுவை சிசிச்சை மூலம் அகற்றப்பட்டு, ரத்த கசிவு ஏற்பட்ட இடத்தில் தையல் போடப்பட்டு சரி செய்யப்பட்டது.

சிறுநீரக பாதிப்பு

அதிகமான ரத்த கசிவு ஏற்பட்டதினால் சிறுநீரகத்திற்கு செல்ல வேண்டிய ரத்தம் குறைந்தது. இதனால் அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவருக்கு சிறுநீரக பாதிப்பும் ஏற்பட்டது. இதையடுத்து சிறுநீரக பாதிப்பு சரி செய்யப்பட்டது. தற்போது அந்த வாலிபர் நலமுடன் உள்ளார்.

இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி நோயாளியின் உயிரை காப்பாற்றிய அவசர சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் கருப்பசாமி, இதய அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் சீனிவாசன், உதவி பேராசிரியர்கள் டாக்டர் இளவரசன், டாக்டர் முகமது மின்னதுல்லா, டாக்டர் அரவிந்த் மற்றும் மயக்கவியல் துறை தலைவர் கல்யாண சுந்தரம் மற்றும் உதவி பேராசிரியர் மதன கோபாலன், சிறுநீரக துறை தலைவர் பிரபாகரன் மற்றும் நர்ஸ் பொற்கொடி உள்பட மருத்துவ குழுவினரை ஆஸ்பத்திரி டீன் நிர்மலா பாராட்டினார்.

மேலும் செய்திகள்