ஜம்மு காஷ்மீர்: என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Update: 2022-06-19 11:59 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இரு தரப்பினருக்கும் இடையே நீடித்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்தவன் என்று தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும் போது, குப்வாரா மாவட்டத்தின் லோலாப் பகுதியில் ஷோவ்கெட் அகமது ஷேக் என்ற பயங்கரவாதி பிடிபட்டான். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குப்வரா பகுதியில் தொடர்ந்து என்கவுன்டர் நடைபெற்று வருவதாகவும் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தெற்கு காஷ்மீரில் உள்ள ஹன்ஜி போரா என்ற இடத்திலும் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நீடித்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்