சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் பலி - அதிர்ச்சி சம்பவம்

மும்பையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-05-08 08:53 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் ட்ரோம்பே பகுதியில் உள்ள ஒரு கடையில் பிரதமேஷ் போக்சே என்பவர் கடந்த 3ம் தேதி சிக்கன் ஷவர்மா வாங்கி சாப்பிட்டுள்ளார். அடுத்த நாள் அவருக்கு வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதமேஷ் அருகிலுள்ள நகராட்சி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் அவரது உடல்நிலை மேலும் மோசமானதையடுத்து கடந்த 5ம் தேதி பிரதமேசின் குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர் சிகிச்சை அளித்த பின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், அன்று மாலையே அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், அதே மருத்துவமனைக்கு மீண்டும்  அழைத்து செல்லப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரதமேசின் உடலை பிரதே பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதால் இறந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் ஷவர்மா கடையின் விற்பனையாளர்களான ஆனந்த் காம்ப்ளே மற்றும் அகமது ஷேக் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்