மலப்புரம் குண்டுவெடிப்பு வழக்கு: மதுரையில் மேலும் இருவர் கைது

மலப்புரம் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக மதுரையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2017-04-10 16:01 GMT
மலப்புரம், 

மலப்புரம் ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு வளாகத்தில் கடந்த நவம்பர் 1–ந் தேதி வெடிகுண்டு ஒன்று வெடித்தது. சக்தி குறைந்த இந்த குண்டு வெடிப்பால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இதைப்போல கொல்லம் மற்றும் ஆந்திராவின் சித்தூர் கோர்ட்டு வளாகங்களிலும் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.

இது தொடர்பாக தேசிய புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதன் பலனாக மதுரையை சேர்ந்த 5 பேர் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் அல்கொய்தா ஆதரவு அமைப்பான ‘அடிப்படை இயக்கத்தை’ சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்கள் அளித்த தகவலின் பேரில் மதுரையை சேர்ந்த மேலும் 2 பேரை நேற்று  அதிகாரிகள் கைது செய்தனர். அபுபக்கர் மற்றும் அப்துர் ரகுமான் ஆகிய அவர்கள் இருவரும் இதே அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களிடம் தேசிய புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்