ஸ்ரீநகரில் பள்ளியில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரம்

ஸ்ரீநகரில் சி.ஆர்.பி.எப். வாகனம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரமாக இறங்கி உள்ளது.

Update: 2017-06-25 03:35 GMT
ஸ்ரீநகர்,

 காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் பந்தாசவுக் அருகே ஸ்ரீநகர்–ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர்.பி.எப்.) நேற்று மாலையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கி மற்றும் தானியங்கி ஆயுதங்களால் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பினர். இதில் சப்–இன்ஸ்பெக்டர் சகிப் சுக்லா மற்றும் 2 வீரர்கள் படுகாயமடைந்தனர். உடனே அவர்களை சக வீரர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு பரிசோதித்த போது சகிப் சுக்லா உயிரிழந்தது தெரியவந்தது. மற்ற 2 வீரர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் விரைந்தனர். பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் இறங்கியது. இதற்கிடையே பயங்கரவாதிகள் அப்பகுதியில் இருந்த அரசு பள்ளிக்குள் நுழைந்தனர். பள்ளிக்குள் பயங்கரவாதிகள் பதுங்கியது ராணுவத்திற்கு தெரியவந்தது. ராணுவம் பள்ளியை சுற்றி வளைத்ததும் காலை 3 மணியளவில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இருதரப்பு இடையேயும் பயங்கர துப்பாக்கி சண்டை தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பள்ளியில் நேற்று மாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெளியேறிய பின்னர்தான் பயங்கரவாதிகள் அங்கு தஞ்சம் அடைந்து உள்ளனர் என்பது தெரியவந்து உள்ளது. பள்ளியில் பயங்கரவாதிகளை தவிர்த்து யாரும் இல்லை எனவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்