குஜராத் வெள்ளம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேரது சடலம் மீட்பு; பலி எண்ணிக்கை 111 ஆக உயர்வு

குஜராத் கனமழை, வெள்ளம் என பல்வேறு விபத்து சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்து உள்ளது.

Update: 2017-07-26 12:55 GMT
ஆமதாபாத், 

வட மாநிலங்களில் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. மராட்டியம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் அதனையொட்டி உள்ள மாநிலங்களில் கனமழை பெய்கிறது. மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக குஜராத் மற்றும் ராஜஸ்தானில் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  

குஜராத்தில் பனாஸ்காந்தா, சாபார்காந்தா, ஆனந்த், பதான் மற்றும் வால்சாத் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாநில மீட்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை, துணை ராணுவம் மற்றும் ராணுவம் தீவிரமாக இறங்கி உள்ளது. பனாஸ்காந்தாவில் வெள்ளநீர் வடிந்துவரும் நிலையில் காரியா கிராமத்தில் பெரும் சேகம் நேரிட்டது தெரியவந்து உள்ளது.
 
காங்கரேஜ் தாலுகாவில் காரியா கிராமத்தில் பனாஸ் நதியின் கரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேரது சடலம் மீட்கப்பட்டு உள்ளது. மீட்பு பணியை பார்த்த கிராம மக்கள் என்ன நடக்கிறது என்பதை உணர முடியாமல் மிகவும் அதிர்ச்சியுடன் பார்த்து உள்ளனர். இதுபோன்ற பெரிய இழப்பு நேரிட்டு இருக்கும் என்று அவர்கள் எண்ணக்கூடவில்லை. சகதியில் இருந்து ஒருவர் பின் ஒருவரது சடலமாக மீட்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம், தண்ணீர் வற்றிய பின்னர் அவை வெளியே தெரியவரும் என தகவல்கள் தெரிவித்து உள்ளது. 

குஜராத்தில் பருவமழை தொடங்கியதில் இருந்து வெள்ளம் உள்பட பல்வேறு விபத்து சம்பவங்களில் பலியோனோர் எண்ணிக்கையானது 111 ஆக உயர்ந்து உள்ளது.

இன்றும் பனாஸ்காந்தா மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் 400-க்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். இரண்டு ஹெலிகாப்டர்கள், 4 தேசிய பேரிடர் மீட்பு குழு படை, இரண்டு எல்லைப் பாதுகாப்பு படை, இரண்டு ராணுவப் பிரிவு பதான் மாவட்டம் மற்றும் அதனை சுற்றி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது மீட்பு பணிகளுக்கு. மருத்துவர்கள், உதவியாளர்கள் என 500 பேர் உதவி பணியில் ஈடுபட்டு உள்ளனர். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய் தொற்று பரவாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.  

மேலும் செய்திகள்