7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே இனி ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்து உள்ளது.

Update: 2017-09-22 23:45 GMT

புதுடெல்லி,

ரெயில் பயணிகள் முன்பு ரெயில் நிலையத்துக்கு தான் சென்று டிக்கெட் எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. தற்போது பெரும்பாலானோர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் வீட்டில் இருந்து கொண்டே ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

இதுவரை இந்த முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்து வங்கி டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலமாக எடுக்கப்பட்டு வந்தன. அதற்கு என சேவை கட்டணம் பயணிகளின் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டது.

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நேரத்தில் ரூ.20 என பிடித்தம் செய்யப்பட்ட சேவை கட்டணத்தை ஐ.ஆர்.சி.டி.சி. தள்ளுபடி செய்தது. ஆனால் இதனால் தங்களுக்கு இழப்பு ஏற்படுவதாக சில வங்கிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதே சமயம் இதற்கு இந்தியன் வங்கி உள்ளிட்ட வங்கிகள் ஒத்துழைப்பு தந்தன.

ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பை தொடர்ந்து ரிசர்வ் வங்கி தற்காலிகமாக ஒரு விதிமுறையை வகுத்தது. அதன்படி ரூ.1000 வரை டிக்கெட் எடுப்பவர்களுக்கு 0.25 சதவீதமும், ரூ.2000 வரை 0.5 சதவீதமும், ரூ.2000–க்கு மேற்பட்ட கட்டணங்களுக்கு 1 சதவீதமும் சேவை கட்டணமாக ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் வசூலிக்கப்பட்டது.

பிப்ரவரி 16–ந்தேதிக்கு பிறகு ரூ.1000 வரை ரூ.5–ம், ரூ.2000 ஆயிரம் வரை ரூ.10, ரூ.2000–க்கு மேற்பட்ட கட்டணங்களுக்கு 0.5 சதவீதமும் சேவை கட்டணமாக வசூலிக்கும்படி ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. இந்த கட்டணம் வசூலிப்பதில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்துக்கும், வங்கிகளுக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டன.

இதையடுத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, யுனைட்டைட் பாங்க் ஆப் இந்தியா, சென்டிரல் வங்கி, ஹெச்.டி.எப்.சி., ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் கார்டுகள் மூலமே இனி டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அறிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்