கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்: விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. #KochiBlast
கொச்சி,
கேரள மாநிலம் கொச்சியில் கப்பல் கட்டும் தளம் உள்ளது. இந்த தளத்தில் ஓ.என்.ஜி.சி. என்று அழைக்கப்படுகிற எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்துக்கு சொந்தமான சாகர் பூஷண் என்ற கப்பல் பழுது பார்க்கும் பணிக்காக நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த கப்பலில் காலை சுமார் 10 மணிக்கு சுமார் 20 ஒப்பந்த தொழிலாளர்கள் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது கப்பலின் முன் பகுதியில் அமைந்து இருந்த டேங்கரில் பலத்த வெடிச்சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து தீப்பிடித்தது.
உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.இருப்பினும் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். 15 பேர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் பலி ஆனவர்களுக்கு மத்திய கப்பல் துறை மந்திரி நிதின் கட்காரியும், கேரள முதல்–மந்திரி பினராயி விஜயனும் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்தனர். மேலும், இந்த விபத்து சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அமைப்புகளின் உதவியுடன் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளதாக நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.