இந்தியாவில் இதுவரையில்லாத அளவு கர்நாடக தேர்தலில் பணத்தை கொட்டிய அரசியல் கட்சிகள்! வேட்பாளர்கள்!!
இந்தியாவில் இதுவரையில்லாத அளவு கர்நாடக தேர்தலில் அரசியல் கட்சிகள் பணத்தை கொட்டி உள்ளது என ஆய்வில் தெரியவந்து உள்ளது. #KarnatakaElection
புதுடெல்லி,
சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் இந்தியாவில் இதுவரையில் நடந்து முடிந்த தேர்தல்களில் செய்யப்பட்ட செலவுகளைவிட அதிகமான அளவு செலவு செய்யப்பட்டு உள்ளது என ஆய்வில் தெரியவந்து உள்ளது. அரசியல் கட்சிகள், வேட்பாளார்கள் செய்த செலுவுகளை அடிப்படையாக கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சிஎம்எஸ் (Centre for Media Studies) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் ரூ. 9,500-10,500 கோடி வரையில் செலவு செய்யப்பட்டு உள்ளது என்றும், இது கடந்த 2013-ம் ஆண்டில் நடந்த தேர்தலின் போது ஆகிய செலவைவிட இருமடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் பிரதமர் மோடி பிரசாரத்திற்கு மேற்கொண்ட செலவுகள் இடம்பெறவில்லை எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் மேற்கொள்ளப்பட்ட செலவுகளுடன் ஒப்பிடுகையில் கர்நாடகாவில் அதிகமான அளவு செலவு செய்யப்பட்டு உள்ளது. பிற மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற போது ஆன செலவைவிட அதிகமான செலவு செய்யப்பட்டு உள்ளது. சட்டசபைத் தேர்தலில் அதிகமாக செலவு செய்த மாநிலங்கள் பட்டியலில் கர்நாடகம், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு வரிசையாக முதல் இடங்களை பிடிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிஎம்எஸ் நிறுவனத்தை சேர்ந்த என் பாஸ்கரா ராவ் பேசுகையில், “2014 பாராளுமன்றத் தேர்தலில் செலவு ரூ. 30,000 கோடியாக இருந்தது, இதுவே 2019 தேர்தலில் ரூ. 50,000-60,000 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற தேர்தல் செலவில் வேட்பாளர்கள் பங்கு 55-60 சதவிதமாக இருக்கும், அரசியல் கட்சிகளின் பங்கு 29-30 சதவிதமாக உயரலாம், இது ரூ. 12,000-20,000 கோடிகளாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது” என குறிப்பிட்டு உள்ளார். கர்நாடக தேர்தலில் தேர்தல் ஆணையம் கோடிக்கணக்கில் பணத்தை பறிமுதல் செய்தது வழக்கமானதாக இருக்கலாம், இருப்பினும் தோல்வியையே தழுவி உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
களத்தகவல்கள், மீடியா தகவல்கள், செய்தியாளர்களின் பேஸ்புக் மற்றும் முக்கிய செயல்பாட்டாளர்களின் கலந்துரையாடல் ஆகியவற்றை கொண்டு செலவு கணக்கு மதிப்பிடப்பட்டு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.