பதில் மனு தாக்கல் செய்யாத கூகுள், முகநூல் வலைத்தளங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதில் மனு தாக்கல் செய்யாத கூகுள், முகநூல் வலைத்தளங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-05-22 00:15 GMT
புதுடெல்லி, 

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோ குறித்து ஐதராபாத்தை சேர்ந்த பிரஜாவாலா என்ற தொண்டு நிறுவனம் 2015-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் அப்போதைய தலைமை நீதிபதி எச்.எல்.தத்துவுக்கு 2 வீடியோ ஆதாரங்களுடன் ஒரு கடிதம் எழுதியது. அதில் ஆபாச வீடியோ காட்சிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி.லோகுர், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக இந்த வழக்கு கடந்த மாதம் 16-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது அனைத்து சமூக வலைத்தளங்களும் தாங்கள் இதுபற்றி எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்த பதிலை அடுத்த விசாரணையின்போது தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

ஆனால் முக்கிய வலைத்தளங்கள் இதுபற்றி எந்த பதில் மனுவையும் நேற்று தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து நீதிபதிகள் அமர்வு சமூக வலைத்தளங்கள் பதில் மனுதாக்கல் செய்யாததை சுட்டிக் காண்பித்து யாகூ, முகநூல் (பேஸ்புக்) இந்தியா, முகநூல் அயர்லாந்து, கூகுள் இந்தியா, கூகுள், மைக்ரோ சாப்ட் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்