துப்பாக்கி சூடு: ஸ்டெர்லைட்டில் சம்பளம் வாங்கிய ப.சிதம்பரம் என்ன பதில் சொல்ல சொல்லப்போறிங்க - சுப்பிரமணியசாமி
ஸ்டெர்லைட்டில் சம்பளம் வாங்கிய இயக்குனராக பணியாற்றிய ப.சிதம்பரம் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு என்ன பதில் சொல்ல சொல்லப்போறிங்க என சுப்பிரமணியசாமி வலியுறுத்தியுள்ளார். #ThoothukudiShooting #SterliteProtest #sterlitekillsthoothukudi
சென்னை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பெண்கள் உட்பட மொத்தம் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, அண்ணாநகர் பகுதியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை அருகே இன்று காலை போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.
போராட்டம் வலுவடைந்ததால், போலீசார் கண்ணீர் புகை வீசியும், ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி துப்பாக்கிகளால் சுட்டும் போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். நிலைமை எல்லைமீறி போனதால் இன்றும் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில், காளியப்பன் என்ற 22 வயது வாலிபர் உயிரிழந்ததை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு ஸ்டெர்லைட்டில் சம்பளம் வாங்கிய இயக்குனராக பணியாற்றிய ப.சிதம்பரம் பதில் சொல்ல வேண்டும் என பா.ஜ.க. எம்.பி., சுப்பிரமணியசாமி கேட்டுள்ளார். மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் பல ஆண்டுகள் ப.சிதம்பரம் இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதற்காக சம்பளமும் வாங்கி இருக்கிறார் என்பதற்கான எல்லா ஆவணங்களும் உள்ளன. ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக அவர் பதில் சொல்ல வேண்டும் என சுப்பிரமணியசாமி குறிப்பிட்டுள்ளார்.