இந்தியா வருகை தந்துள்ள பூடான் பிரதமருடன் ராகுல் காந்தி சந்திப்பு
3 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகை தந்துள்ள பூடான் பிரதமர் இன்று ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். #RahulGandhi
புதுடெல்லி,
பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று, பிரதமர் மோடியை சந்தித்து டோப்கே ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பூடான் பிரதமர் டோப்கே சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்த தகவலை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, “ பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கேவை சந்தித்தேன். இருநாடுகளுக்கு இடையேயான உறவை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து நாங்கள் இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினோம்” என்று தெரிவித்துள்ளார். சந்திப்பு தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 5 ஆம் தேதி இந்தியா வருகை தந்தார். இந்தியா வருகை தந்த டோப்கேவை, வெளியுறவுத்துறை இணை மந்திரி விகே சிங் வரேவேற்றார்.