இந்தியாவை மேம்படுத்துவதற்கான புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் நிகழ்த்த வேண்டும் - பிரதமர் மோடி

இந்தியாவை மேம்படுத்துவதற்கான புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் நிகழ்த்த வேண்டும் என்று மும்பை ஐஐடி விழாவில் பிரதமர் மோடி பேசினார். #NarendraModi

Update: 2018-08-11 10:46 GMT
மும்பை,

மும்பை ஐஐடியின் 56 -வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி  மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

நாட்டைக் கட்டமைப்பதில் ஐஐடி கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.  உலக அளவில் இந்திய பிராண்ட் பிரபலமடைய ஐஐடிக்கள் உதவியதாகத் தெரிவித்துள்ளார். மேலும், உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப மனிதசக்தியாக இந்தியா உருவாக ஐஐடி கல்வி நிறுவனங்கள் பங்காற்றியுள்ளது.

இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஐஐடி மாணவர்கள் முன்னிலையில் உள்ளனர்.  புதிய யோசனைகள் கல்லூரி வளாகங்களில் இருந்தே வெளி வருகிறது. அரசு அலுவலகங்களில் இருந்தோ, கண்கவர் கட்டடங்களில் இருந்தோ அல்ல.

இந்தியாவை பல வகையிலும் மேம்படுத்துவதற்கான புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் நிகழ்த்த வேண்டும் . புதுமைகளைக் கண்டுபிடிக்காத சமூகம் தேக்கநிலையை அடைந்து விடும். 

புதுமையான தொழில்களைத் தொடங்குவதற்கான மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது.  அதன் மூலம், புதிய கண்டுபிடிப்புகளின் மீது கொண்டுள்ள தாகம் வெளிப்படுத்துகிறது.  புதிய கண்டுபிடிப்புகளும், புதுமையான தொழில்களைத் தொடங்க வழிவகுப்பதும் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான அடிப்படை கட்டமைப்பாகும். 

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து ஐஐடி கல்வி நிறுவன வளாகத்தில் எரிசக்தி அறிவியல், பொறியியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் மையம் ஆகியவற்றுக்கான புதிய கட்டடங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும் ம்பை ஐஐடிக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யவும் பிரதமர் உறுதியளித்தார்.

இந்த விழாவில் மனித வளமேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்