போலீசாரிடம் தகவல் தெரிவித்ததாக சந்தேகித்து கிராமவாசியை கொலை செய்த நக்சல்கள்
போலீசாரிடம் தகவல் தெரிவித்ததாக சந்தேகித்து கிராமவாசி ஒருவரை ஆயுதமேந்திய நக்சல்கள் குழு கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Naxals #Dantewada
தண்டிவாடா,
சத்தீஷ்கார் மாநிலம் தண்டிவாடா பகுதியில் நேற்றிரவு ஆண்சடலம் ஒன்று கிடந்துள்ளது. இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே கொலையுண்டவர் கிராமவாசி லோகேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. லோகேஷ் தங்களை பற்றிய தகவல்களை போலீசாரிடம் தெரிவிப்பதாக சந்தேகித்த நக்சல்கள், குவாகொண்டா போலீஸ் நிலையத்திற்குட்பட்ட மத்திய ரிசர்வ் படை போலீசார் முகாம் பகுதி அருகே அமைந்திருக்கும் அவரது வீட்டிற்கு சென்று வெளியே இழுத்து முரட்டு தனமாய் தாக்கி படுகொலை செய்தனர் என போலீஸ் கண்காணிப்பாளர் அபிஷேக் பால்வால் கூறினார்.
இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியிருக்கும் போலீசார், நக்சல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே போலீசாரிடம் தகவல் தெரிவித்ததாக சந்தேகித்து கிராமவாசி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.