சட்டீஸ்காரில் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கிய பெண் உள்பட 5 பேர் மூச்சு திணறி உயிரிழப்பு

சட்டீஸ்காரில் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கிய வீட்டு உரிமையாளரின் மனைவி உள்பட 5 பேர் மூச்சு திணறி உயிரிழந்தனர்.

Update: 2018-09-16 11:25 GMT

ராய்பூர்,

சட்டீஸ்காரின் ஜாஷ்பூரில் பந்திரிபனி கிராமத்தில் அமைந்த வீடு ஒன்றில் சமீபத்தில் கட்டப்பட்ட புதிய கழிவு நீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து மர துண்டுகளால் ஏற்பட்ட அடைப்பினை நீக்க 4 துப்புரவு தொழிலாளர்கள் வந்துள்ளனர்.

அவர்களில் 2 பேர் முதலில் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி உள்ளனர்.  ஆனால் அவர்கள் வெளியே வரவில்லை.  இதனை அடுத்து மற்ற 2 பேர் உள்ளே இறங்கியுள்ளனர்.  அவர்களும் வெளியே வரவில்லை.

இதனால் வீட்டு உரிமையாளரின் மனைவி கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி உள்ளார்.  ஆனால் உள்ளே இறங்கிய ஒருவரும் வெளியே வராத நிலையில் அருகில் இருந்த சிறுவன் உடனடியாக ஓடி சென்று உள்ளூர்வாசிகளிடம் தகவல் தெரிவித்து உள்ளான்.

அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 5 பேரையும் வெளியே மீட்டனர்.  அதன்பின் அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  ஆனால் அவர்கள் உயிரிழந்து விட்டனர் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் மூச்சு திணறலால் அவர்கள் உயிரிழந்து உள்ளனர் என தெரிய வந்துள்ளது.  அவர்கள் சாவித்திரி (வயது 45), பட்டூ டாம் (வயது 60), பரம்ஜீத் பைக்ரா (வயது 19), ராம்ஜீவன் ராம் (வயது 35) மற்றும் ஈஷ்வர் சாய் (வயது 40) என தெரிய வந்துள்ளது.  எனினும், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே அவர்கள் உயிரிழந்தது பற்றிய சரியான காரணம் தெரிய வரும்.

மேலும் செய்திகள்