கடும் விமர்சனங்களை அடுத்து 8.7 மில்லியன் 'குழந்தை பாலியல்' படங்களை பேஸ்புக் நீக்கியது

கடும் விமர்சனங்களை அடுத்து பேஸ்புக் 8.7 மில்லியன் 'குழந்தை பாலியல்' படங்களை நீக்கியுள்ளது.

Update: 2018-10-25 12:02 GMT


வாஷிங்டன்,


சமூக வலைதளமான பேஸ்புக்கில் குழந்தைகளை தவறாக சித்தரிக்கும் புகைப்படங்கள் பேஸ்புக்கில் நிறைந்திருப்பது தொடர்பாக பிபிசி விசாரணையை செய்து செய்தியை வெளியிட்டது. இதனையடுத்து பேஸ்புக் நிறுவனம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. இதனையடுத்து குழந்தைகள் பாலியல் தொடர்பான புகைப்படங்களை முடக்க பேஸ்புக் நடவடிகையை மேற்கொண்டது. இப்போது உரிய தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு குழந்தைகள் தொடர்பான பாலியல் படங்கள் முழுவதும் அகற்றப்பட்டுள்ளது என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 8.7 மில்லியன் எண்ணிக்கை அளவில் இடம்பெற்ற குழந்தைகளை தவறான தோற்றத்தில் காட்டும் படங்கள், தவறாகச் சித்தரிக்கும் படங்களை அகற்றிவிட்டதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

படங்களை அகற்ற, செயற்கை நுண்ணறிவு பிரிவு மற்றும் மெஷின் கற்றல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டது. படங்களை வலைதளத்தில் ஏற்றியவர்களுக்கு தகவல்கள் அனுப்பிய பிறகு கிட்டத்தட்ட அனைத்து படங்களும் (99 சதவீதம்) அகற்றப்பட்டுவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் பாதுகாப்பு, பகுப்பாய்வு மற்றும் தடயவியல் விசாரணைகள் போன்றவற்றில் செயல்பட, சட்ட அமலாக்க பின்னணி கொண்டவர்களிடம் பயிற்சிபெற்ற சிறப்பு தொழில்நுட்பக் குழு எங்களிடம் உள்ளது. இவர்கள் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை மறுபரிசீலனை செய்வார்கள் என்றும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.  

தேவையற்ற புகைப்படங்கள் மற்றும் புதிய புகைப்படங்களை ஆய்வு செய்யவும் என்ஜீனியர்கள் குழு கவனம் செலுத்தி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்