பாலியல் துஷ்பிரயோகம் செய்து மாணவிக்கு 35 கத்தி குத்து

குஜராத் மாநிலத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு 35 இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-11-07 10:42 GMT
குஜராத் மாநிலம், உனா பகுதி அருகே உள்ள சாலையில் 16 வயது மாணவி ஒருவரின் சடலம் கிடப்பதை பார்த்த உள்ளூர் வாசிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த  போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கொலை செய்யப்பட்ட மாணவி கோடினார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடந்ததற்கு முன்தினம் காலை 8.30 மணிக்கு கையில் ஒரு புத்தகத்துடன் போன் பேசிக்கொண்டே மாணவி வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். ஆனால் ஒரு மணிநேரம் ஆகியும் மாணவி வீடு திரும்பவில்லை. அவருடைய செல்போனும் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அருகாமையில் உள்ள இடங்களில் தேடி பார்த்துள்ளனர்.

பின்னர் 11 மணிக்கு போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் தான் நேற்று காலை மாணவியின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. 3-க்கும் மேற்பட்ட நபர்களால் மாணவி கொடூரமாக தாக்கப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னர் அவருடைய உடலில் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர் என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தற்போது குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்