இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த 6 சீனர்கள் நேபாள போலீசிடம் ஒப்படைப்பு
இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த 6 சீனர்கள் நேபாள போலீசிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பராய்ச் (உ.பி),
இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த 6 சீனர்களை பிடித்த இந்திய பாதுகாப்பு படையினர் நேபாள நாட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். நேபாளத்தில் உள்ள ரூபைதீஹா எல்லை வழியாக இந்திய பகுதிக்குள், இரண்டு பெண்கள் உட்பட ஆறு சீன நாட்டவர்கள் நுழைந்தனர்.
இதைக்கவனித்த இந்திய பாதுகாப்பு படையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நேபாள்கஞ்ச் பகுதியில் உள்ள பகேஷ்வரி கோவிலில் வழிபாடு நடத்த ஆறு பேரும் சென்றதும், அப்போது தவறுதலாக இந்திய பகுதிகளுக்குள் நுழைந்ததும் தெரியவந்தது.
பிடிபட்ட ஆறு பேரிடம் சந்தேகத்திற்கிடமான எந்த பொருளும் கிடைக்காததால், நேபாள போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மொழிப்பிரச்சினை காரணமாக விசாரணை முடிய சற்று நேரம் எடுத்துக்கொண்டதாகவும், இதனால், வனத்தில் உள்ள விருந்தினர் இல்லத்தில் தங்க வைக்கபட்டதாகவும் பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.