ராஜஸ்தானில் முதல்வரை ராகுல்காந்திதான் தேர்வு செய்ய வேண்டும் -காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

ராஜஸ்தானில் முதல்வரை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திதான் தேர்வு செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூறியுள்ளனர்.

Update: 2018-12-12 09:45 GMT
ஜெய்பூர்,

பா.ஜனதா ஆட்சி செய்த ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. ஆட்சியை கைப்பற்றினாலும் முதல்வர் யார் என்பதில் பெரும் தலைவலி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இளம் தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தவரையில் காங்கிரஸில் சச்சின் பைலட்டும், மத்திய பிரதேசத்தை பொறுத்தவரையில் ஜோதிராதித்ய சிந்தியாவும் முக்கிய தலைவர்களாக இருக்கிறார்கள். இவர்களை மாநில தலைமையில் அமரவைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

ராஜஸ்தானில் 2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியை இழப்பதற்கு காரணமே சச்சின் பைலட் மற்றும் முன்னாள் முதல்வர் அசோக் கெலட் இடையிலான மோதல் போக்கே என்று கூறப்பட்டது. இம்முறை முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் காங்கிரஸ் களம் கண்டு வெற்றியை தனதாக்கியது. 

யார் முதல்வர்?

காங்கிரஸ் கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் அவினாஷ் பாண்டே மற்றும் கண்காணிப்பாளர் கேசி வேணுகோபால் தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் சச்சின் பைலட்டும், அசோக் கெலாட்டும் கலந்துக்கொண்டுள்ளனர். கூட்டம் தொடர்ந்து நடைபெறும் நிலையில் ராஜஸ்தானில் முதல்வரை ராகுல் காந்திதான் தேர்வு செய்ய வேண்டும்  என்று எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசுகையில், “எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. மாநில முதல்வர் யார்? என்பது தொடர்பாக முடிவு எடுக்கும் பொறுப்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ஒப்படைக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார். முதல்வர் யார் என்பது இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் குழு கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக் கோர உள்ளது.

மேலும் செய்திகள்