மெகுல் சோக்சிக்கு எதிராக இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது
நிரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்சிக்கு எதிராக இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி,
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்தது கடந்த சில மாதங்களுக்கு முன் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவர்கள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் என கூறப்படுகிறது. அவர்களை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
கீதாஞ்சலி குழும உரிமையாளரான மெகுல் சோக்சியின் நெருங்கிய கூட்டாளி தீபக் குல்கர்னியையும் இந்த வழக்கில் தேடி வந்தனர். கடந்த மாதம் ஹாங்காங்கில் இருந்து கொல்கத்தா விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை அமலாக்க துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்நிலையில், மெகுல் சோக்சிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கும்படி சி.பி.ஐ. அமைப்பு இன்டர்போலுக்கு கோரிக்கை விடுத்தது. இந்த வேண்டுகோளை ஏற்று மெகுல் சோக்சிக்கு எதிராக இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் ஒன்றை பிறப்பித்துள்ளது.