குஜராத், அசாம் பா.ஜனதா முதல்வர்களை எழுப்பி விட்டோம், மோடி இன்னும் தூங்குகிறார் - ராகுல் காந்தி

குஜராத், அசாம் மாநில பா.ஜனதா முதல்வர்களை எழுப்பி விட்டோம் என கூறியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி இன்னும் தூங்குகிறார் அவரை எழுப்புவோம் என கூறியுள்ளார்.

Update: 2018-12-19 09:43 GMT
புதுடெல்லி,

பாரதீய ஜனதா கட்சி வசம் இருந்த ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் விவசாய கடன் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்து இருந்தார். அதன்படி மத்தியபிரதேசத்தில்  ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் ரத்து செய்யப்பட்டது. சத்தீஷ்கார் மாநிலத்தில் ரூ.6,100 கோடி விவசாய கடன்கள் ரத்து செய்யப்பட்டது. 

பா.ஜனதா தேர்தலில் தோல்வி அடைந்ததில் விவசாயிகள் பிரச்சனை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், அனைத்து விவசாயிகளின் கடன்களும் ரத்து செய்யப்படும் வரை பிரதமர் மோடியை தூங்கவிட மாட்டோம் என்று கூறினார்.

மத்தியபிரதேசம், சத்தீஷ்காரை அடுத்து பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் அசாம் மாநிலத்திலும் ரூ.600 கோடி விவசாய கடன் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பெற்ற கடனில் 25 சதவீதம் (அதிகபட்சம் ரூ.25 ஆயிரம்) தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.  குஜராத் மாநிலத்தில் விவசாயிகளின் ரூ.650 கோடி மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக அம்மாநில முதல்வர் விஜய் ரூபனி தெரிவித்துள்ளார். பா.ஜனதா முதல்வர்களின் நடவடிக்கை தொடர்பாக ராகுல் காந்தி தன்னுடைய டுவிட்டரில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், “குஜராத் மற்றும் அசாம் மாநிலங்களில் முதல்வர்களை காங்கிரஸ் எழுப்பி விட்டது. பிரதமர் மோடி இன்னும் தூங்கிக் கொண்டு இருக்கிறார். அவரையும் தூக்கத்திலிருந்து எழுப்புவோம்” என கூறியுள்ளார். 2019 பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய பா.ஜனதா அரசு விவசாயிகள் பிரச்சனையில்  முக்கிய நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால்  விவசாயிகளுக்கான நிவாரணம் என்னவகையில் இருக்கும் என்பது தெரியவரவில்லை.

மேலும் செய்திகள்