வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்ற சிறுமியை படுக்கையில் கட்டி போட்டு சில்மிஷத்தில் ஈடுபட்ட ஊழியர் கைது
மகாராஷ்டிராவில் நகர மருத்துவமனையில் வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்ற டீன் ஏஜ் சிறுமியை ஊழியர் ஒருவர் கயிறால் கட்டி போட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தின் கல்வா நகரில் நகர மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இங்கு 14 வயது சிறுமி ஒருவர் வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒரு கையை படுக்கையில் கட்டி போட்டு உள்ளனர். அந்த கை வழியே சிறுமிக்கு மருந்து செலுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், தினேஷ் கோலி (வயது 39) என்ற மருத்துவமனையை சுத்தம் செய்யும் ஊழியர் அங்கு வந்துள்ளார். அவர் சிறுமியின் மற்றொரு கையையும் படுக்கையில் கட்டி போட்டு உள்ளார். அதன்பின் அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த சிறுமி அச்சமடைந்து திணறியுள்ளார்.
இதனை மற்றொரு படுக்கையில் இருந்த நோயாளி கண்டுள்ளார். அவர் உடனடியாக சத்தம் போட்டு அலறியுள்ளார்.
இதனை அடுத்து ஊழியரை மற்றவர்கள் பிடித்துள்ளனர். சிறுமியின் தந்தை அளித்த புகாரை தொடர்ந்து போலீசார் ஊழியரை கைது செய்தனர். இதுபற்றி எதுவும் தெரிவிக்க மருத்துவமனை நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர்.