இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்க பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார் மெகுல் சோக்சி

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்கும் நோக்கில் இந்திய பாஸ்போர்ட்டை மெகுல் சோக்சி ஒப்படைத்துள்ளார்.

Update: 2019-01-21 05:49 GMT
புதுடெல்லி,

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்தது கடந்த சில மாதங்களுக்கு முன் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். 

இதற்கிடையில், கீதாஞ்சலி குழும உரிமையாளரான மெகுல் சோக்சி, ஆண்டிகுவாவில் தஞ்சம் அடைந்தது தெரியவந்தது.  அவரை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் ஆண்டிகுவாவுடன் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் சோக்சியை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது. 

அவரிடம் ஆண்டிகுவா மற்றும் இந்தியாவின் குடியுரிமைகள் இருந்தன. ஒருவர் இரு குடியுரிமையை வைத்திருக்க கூடாது என்று அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், சோக்சி தனது இந்திய குடியுரிமையை விடுவதற்கு முடிவு செய்து தனது இந்திய பாஸ்போர்ட்டை ஆண்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார். 

 இந்தியாவுக்கு நாடு கடத்துவதை தடுக்கும் நோக்கில், இந்திய பாஸ்போர்ட்டை ஆண்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைத்து உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. 

மேலும் செய்திகள்