சிறுமி பாலியல் பலாத்காரம்: ஸ்ரீநகரில் முழு அடைப்பு

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, ஸ்ரீநகரில் முழு அடைப்பு நடத்தப்பட்டது.

Update: 2019-05-13 21:15 GMT
காஷ்மீர்,

காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் மர்ம நபர்கள் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டித்து பல்வேறு அமைப்புகள் ஸ்ரீநகரில் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தது. அதனை ஏற்று நேற்று பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு இருந்தன. பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஆனால் அரசு அலுவலகங்கள், வங்கிகள் வழக்கம்போல இயங்கின.

3 வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என தலைவர்கள் கூறிவருகிறார்கள். மாநில முன்னாள் முதல்-மந்திரிகள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல்வாதியாக மாறிய ஷா பைசல் ஆகியோர் இந்த சம்பவத்தை கண்டித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்