பீகாரில் மூளை காய்ச்சலுக்கு பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு

பீகாரில் மூளை காய்ச்சலுக்கு பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வடைந்து உள்ளது.

Update: 2019-06-16 05:05 GMT
முசாபர்பூர்,

பீகார் மாநிலம் முசாபர்நகரில் மூளை காய்ச்சல் நோய் குழந்தைகளிடையே பரவி வருகிறது.  கடந்த ஜனவரியில் பரவ தொடங்கிய இந்நோய் கோடை காலத்தில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதில், கடந்த மாதத்தில் 11 பேர் வரை உயிரிழந்தனர்.  இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன் 41 ஆக உயர்ந்தது. அதன்பிறகு முசாபர்பூர் மாவட்டத்தில் மேலும் 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.  ஆனால் பீகாரின் ஆளும் நிதீஷ் குமார் அரசு, குறைந்த சர்க்கரை அளவால் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர் என தெரிவித்தது.

பீகாரின் முசாபர்பூர், கயா ஆகிய மாவட்டங்களில் நோய் தாக்கம் அதிக அளவில் உள்ளது.  ‘அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும் கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவி இருக்கிறது.

நோய் பாதிக்கப்பட்டு 117 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  இந்நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தவர்களில் இன்றும் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதுவரை இந்நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்