இந்த ஆண்டில் அசாமில் மூளை அழற்சி நோய்க்கு 49 பேர் சாவு - தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

இந்த ஆண்டில் அசாமில் மூளை அழற்சி நோய்க்கு 49 பேர் உயிரிழந்ததால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2019-07-06 22:15 GMT
கவுகாத்தி,

ஜப்பானிய என்சிபாலிட்டிஸ் எனப்படும் மூளை அழற்சி நோய் அசாமில் வேகமாக பரவி வருகிறது. கோக்ரஜார் மாவட்டத்தை தவிர பிற மாவட்டங்களில் பரவலாக காணப்படும் இந்த நோய்க்கு இந்த ஆண்டில் கடந்த 5-ந்தேதி (நேற்று முன்தினம்) வரை 49 பேர் உயிரிழந்து உள்ளனர். 190 பேர் வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநில சுகாதாரத்துறைக்கு பெரும் சவாலாக விளங்கும் இந்த நோயை கட்டுப்படுத்த அசாம் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மாநில அரசில் பணியாற்றி வரும் சுகாதார பணியாளர்களை கிராமங்கள் தோறும் அனுப்பி வைத்து நோய் கண்டுபிடிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

மேலும் கிராமங்களில் இருந்து மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு செல்வதற்காக மேற்படி நோயாளிகளுக்கு இலவச பயண சலுகை வழங்கப்படுகிறது. இதைப்போல அரசு மருத்துவமனைகளில் போதிய அவசர சிகிச்சை பிரிவு இல்லாததால், தனியார் மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுவதுடன், அவர்களின் சிகிச்சைக்கான செலவினை அரசே ஏற்றுக்கொள்வதாக மாநில சுகாதார மந்திரி ஹிமந்த பிஸ்வ சர்மா கூறினார்.

மேலும் செய்திகள்