குழந்தைகள் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்பு: சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கை எடுத்தது

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவதை தானாக முன்வந்து வழக்காக எடுக்க முடிவு செய்துள்ளது.

Update: 2019-07-12 22:30 GMT
புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவதை தானாக முன்வந்து வழக்காக எடுக்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த அமர்வின் நீதிபதிகள் கூறியதாவது:-

கடந்த ஜனவரி 1-ந்தேதியில் இருந்து ஜூன் 30-ந்தேதிவரை நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக 24 ஆயிரம் வழக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றில் 6 ஆயிரம் வழக்குகளில்தான் விசாரணை தொடங்கி உள்ளது. இவை எல்லாம் கவலை அளிக்கும் சம்பவங்கள்.

ஆகவேதான், தானாக முன்வந்து வழக்கு நடத்துகிறோம். சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர், இதுதொடர்பாக ஒரு ரிட் மனுவை திங்கட்கிழமை விசாரணைக்கு வரும்வகையில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வழக்கில், கோர்ட்டுக்கு உதவுபவராக மூத்த வக்கீல் வி.கிரி நியமிக்கப்படுகிறார். அவரும், சொலிசிட்டர் ஜெனரலும் தவிர, மூன்றாம் நபர் யாரும் இவ்வழக்கில் தலையிட அனுமதிக்க மாட்டோம். இக்குற்றங்களுக்கு எதிராக தேசிய அளவில் மக்கள் உணர்வை எழுப்பும்வகையில் உத்தரவுகளை பிறப்பிக்க போகிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

மேலும் செய்திகள்