5 மாநிலங்களில் கவர்னர்கள் மாற்றம்: ஜனாதிபதி அலுவலகம் அறிவிப்பு

மத்திய அரசு நேற்று 5 மாநிலங்களில் கவர்னர்களை மாற்றியுள்ளது.

Update: 2019-07-20 23:00 GMT
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நேற்று மாநில கவர்னர்களில் பெரிய அளவில் மாற்றம் செய்தது. பீகார், மத்தியபிரதேச மாநில கவர்னர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். நாகாலாந்து, மேற்குவங்காளம், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக ஜனாதிபதி அலுவலகமான ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்தியபிரதேச மாநில கவர்னர் ஆனந்திபென் பட்டேல் இடமாற்றம் செய்யப்பட்டு, உத்தரபிரதேச மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். பீகார் கவர்னர் லால்ஜி தாண்டன் மத்தியபிரதேச கவர்னராக மாற்றப்பட்டார்.

சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீலும், ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான ஜெகதீப் தாங்கர் மேற்குவங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார். பா.ஜனதா கட்சியின் தலைவரான ரமேஷ் பயஸ் திரிபுரா கவர்னராக நியமிக்கப்பட்டார். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.வான பாகு சவுகான் பீகார் கவர்னராகவும், ஆர்.என்.ரவி நாகாலாந்து கவர்னராகவும் நியமிக்கப்பட்டனர்.

அவர்கள் தங்கள் பொறுப்புகளில் பதவி ஏற்கும் நாளில் இருந்து இந்த உத்தரவு அமலுக்கு வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்