உறவினர்களிடம் அழைத்து செல்கிறேன் என கூறி காதலியை பள்ளத்தில் தள்ளி விட்டு தப்பிய காதலன்

காதலியை உறவினர்களிடம் அழைத்து செல்கிறேன் என கூறி பள்ளத்தில் தள்ளி விட்டு சென்ற காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-07-22 14:43 GMT
உத்தரகாண்டில் பாவ்ரி நகரில் ஆத்வனி பகுதியில் பள்ளம் ஒன்றில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது.  இதனை அடுத்து அருகிலுள்ள கிராமவாசிகள் ஓடி வந்து பள்ளத்தினுள் கவனித்தனர்.  அங்கே இளம்பெண் ஒருவர் உதவி கேட்டபடி இருந்துள்ளார்.

அவரை கிராமத்தினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.  இதுபற்றி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.  அவர்கள் வந்து விசாரணை நடத்தினர்.  இதில், மேற்கு வங்காளத்தினை சேர்ந்த இந்த பெண் டெல்லியில் கடந்த 2 வருடங்களாக தனது காதலனுடன் வசித்து வந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், அவரை டெல்லியில் இருந்து உத்தரகாண்டிற்கு காரில் காதலன் அழைத்து வந்துள்ளார்.  அங்கு தனது கிராமத்தில் உறவினர்களிடம் அறிமுகம் செய்து வைக்கிறேன் என கூறியுள்ளார்.  இதனை நம்பி அந்த பெண்ணும் அவருடன் சென்றுள்ளார்.

இதன்பின் அவர்கள் கிராமத்திற்கு நடந்து சென்றுள்ளனர்.  ஆனால் திடீரென வழியில் இருந்த ஒரு பள்ளத்தில் அந்த பெண்ணை தள்ளி விட்டு விட்டு, காதலன் அங்கிருந்து தப்பியோடி உள்ளார்.  இந்த சம்பவத்தில் பெண்ணுக்கு கை மற்றும் காலில் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளன.  அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதனிடையே தப்பியோடிய காதலனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்