கேரளா; மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை
கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், அங்கு பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம் முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களுக்கு பலியானோர் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. 2.26 லட்சம் மக்கள் 1,239 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கேரளாவில் உள்ள மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இடுக்கி, திரிசூர், பாலக்காடு, வயநாடு, கன்னூர், கசர்கோட் ஆகிய இடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.