உறவினர்களை சந்திக்க உமர் அப்துல்லா, மெகபூபா முப்திக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக தகவல்
உறவினர்களை சந்திக்க உமர் அப்துல்லா, மெகபூபா முப்திக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி நீக்கப்பட்டது. அத்துடன் அந்த மாநிலம், ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. வதந்திகள் பரவி வன்முறை ஏற்படலாம் என்பதால், ஜம்மு காஷ்மீரில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது, அங்கு படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
அரசின் நடவடிக்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால், ஜம்மு காஷ்மீரின் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். ஸ்ரீநகரில் உள்ள ஹரி நிவாஸில் உமர் அப்துல்லா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், மெகபூபா முப்தி சுற்றுலாத்துறையின் பங்களா இருக்கும் செஸ்மஷாகியில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் உமர் அப்துல்லாவை அவரது சகோதரி சாபியா மற்றும் குழந்தைகள் சுமார் 20 நிமிடம் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளி வந்துள்ளது. இந்த வாரத்தில், 2 முறை குடும்பத்தினர் சந்தித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோன்று மெகபூபா முப்தியை அவரது தாயார், சகோதரி உள்ளிட்டோர் வியாழன் அன்று சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.