15 வயது நீச்சல் வீராங்கனைக்கு பாலியல் தொந்தரவு அளித்த பயிற்சியாளர்; வீடியோ வெளியானதால் தலைமறைவு

15 வயது நீச்சல் வீராங்கனைக்கு பாலியல் தொந்தரவு அளித்த பயிற்சியாளர் வீடியோ வெளியானதால் தலைமறைவாகி உள்ளார்.

Update: 2019-09-06 11:28 GMT
கோவா,

கோவா நீச்சல் அணியின் பயிற்சியாளராக 2 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சூரஜித் கங்குலி. இவர் தன்னிடம் பயிற்சி பெற்று வந்த 15 வயது வீராங்கனையிடம் தவறாக நடக்க முயற்சிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லும் காட்சி பதிவாகி இருக்கிறது.

அதில் அந்த சிறுமி,  எனக்கு 10 வயதிலிருந்தே அவரிடம் பயிற்சி பெற்றேன். எனக்கு நல்ல பலன்கள் கிடைத்தன. அவர் என்னை கோவாவுக்கு வரச் சொன்னார். நான் சென்றேன். என் தந்தை பெரும்பாலும் அங்கு இருந்தார். ஆனால் பயிற்சியாளரின் நடத்தை பயங்கரமானதாக இருந்தது.

அவர் என்னைத் தொடுவார், அச்சுறுத்துவார். யாரிடமும் சொல்லாதே என்று எச்சரித்தார். இது உனக்கும் உனது பயிற்சியாளருக்கும் இடையில் உள்ளது என்றார். உன் பெற்றோரிடம் சொல்லாதே. உனக்கு எதிர்காலம் இருக்கிறது என்றார்.

விளையாட்டுகளில் பாலியல் துன்புறுத்தல்கள் நிகழ்கின்றன, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நான் பேச விரும்புகிறேன். இது நீண்ட காலமாக நடந்து வருகிறது. நான் பேசவில்லை என்றால், மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறி உள்ளார்.
 
நீச்சல் வீராங்கனை சிறுமி தேசிய அளவில் பதக்கம் வென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து கோவா போலீசார், பயிற்சியாளர் சுராஜித் கங்குலி மீது கற்பழிப்பு, மானபங்கப்படுத்துதல், தீய நோக்கத்துடன் தவறாக நடந்து கொள்ளுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் சிறுமி என்பதால் போக்சோ சட்டத்தின் படியும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. கோவா போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவான பயிற்சியாளரை தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் கோவா நீச்சல் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து சுராஜித் கங்குலியை, அந்த மாநில நீச்சல் சங்கம் உடனடியாக நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்து இருக்கும் மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

அத்துடன் அந்த பயிற்சியாளர் நாட்டில் எந்தவொரு இடத்திலும் பயிற்சியாளர் பணியில் சேர முடியாத வகையில் இந்திய நீச்சல் சம்மேளனம் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.

மேலும் செய்திகள்